20.1.14

9.5 சதவீத உயர்வுக்கு UFBU ஒப்புக்கொண்டா இருக்கிறது?


ஊதிய உயர்வினை வேண்டியும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நாடு முழுவதும் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பான UFBU (Un ited Forum of Bank Employees Unions)  அறைகூவல் விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து கிராம வங்கிகளில் உள்ள அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பான UFRRBU (United Forum of RRB unions) தாங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதென அறிவித்தன. பத்து லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆயத்தமான வேலையில், 17.1. 2014 அன்று மும்பையில், IBAவுக்கும், UFBUவுக்கும் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், IBA 9.5% ஊதிய உயர்வினை முன்வைத்ததை அடுத்து UFBU, வேலைநிறுத்தத்தை ஒத்தி வைப்பதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை 27.1.2014ல் தொடருவதாகவும் அறிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் இணையத்திலும், நேரிலும் சில தோழர்கள் 9.5 சதவீத உயர்வுக்கு ஒப்புக்கொண்டு வேலைநிறுத்தத்தை தள்ளி வைத்தது சரியல்ல என்றும், வங்கி ஊழியர்கள் ஊதிய விகிதங்களில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர். நம் வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இதுகுறித்து சில அடிப்படையான விளக்கங்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகப் படுகிறது.

முதலில், IBA  முன்வைத்த 9.5 சதவீத உயர்வை UFBU  எங்குமே ஒப்புக்கொண்டதாக சொல்லப்படவில்லை. UFBU தரப்பில் 30 சதவீத உயர்வு என்பதுதான் கோரிக்கை. IBA 5 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்தவே முடியாது என  பிடிவாதம் பிடித்தது. மேலும், தாங்கள் வைத்திருக்கும் எதிர்க் கோரிக்கைகள் குறித்து பேசுவதில் முனைப்பாக இருந்தது. நம் கோரிக்கைகள் குறித்து பேசாமல் இழுத்தடித்தது.  நம் தரப்பு கோரிக்கைகளை பேசி இறுதிப் படுத்திய பிறகே, IBAவைக்கும் கோரிக்கைகள் குறித்துப் பேசுவது என்பது UFBUவின் நிலைபாடு. இந்த நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாமல், காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டே வந்தது. IBA  பேச்சுவார்த்தை தேதிகளையும் தள்ளிப் போட்டு, பேச்சுவார்த்தையை மதிக்காத அலட்சியப் போக்கை காட்டியது.

பேச்சுவார்த்தைக்கு IBA மதிப்பளிக்காத நிலையில், UFBU போராட்டங்களை அறிவித்தது. டிசம்பர் 18ம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தியது. அப்போதும் IBA தரப்பில் மாற்றங்களும், அசைவுகளும் தென்படவில்லை. எனவே அடுத்தக் கட்டமாக, ஜனவரி 20, 21 தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. வணிக வங்கி ஊழியர்களோடு கிராம வங்கி ஊழியர்களும் இணைந்துகொள்ள, வங்கி ஊழியர்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையும், எழுச்சியும் ஏற்பட்டது.

IBA இந்தமுறை இறங்கி வந்தது. ஜனவரி 29ம் தேதிதான் அடுத்தப் பேச்சுவார்த்தை என இழுத்தடித்த IBA  17.1. 2014ல் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது.. பேச்சுவார்த்தையில், தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி, 5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் உயர்வினை முன்மொழிந்திருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்ப்பதற்கு தயாராகி இருக்கிறது. வங்கி ஊழியர்களின் உறுதியும், ஒற்றுமையும் IBAவை அசைத்திருக்கிறது. னவே UFBUவும் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்திருக்கிறது. அவ்வளவுதான். 9.5 சதவீத உயர்வை ஒப்புக்கொண்டல்ல, என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் UFBU நிச்சயம் மேலும் ஊதிய உயர்வு வேண்டும் என தன் தரப்பை வலியுறுத்தும். 25 சதவீத ஊதிய உயர்வுக்குக் குறைந்து UFBU ஒப்புக்கொள்வதில்லையென உறுதியாய் இருக்கிறது. IBA  திரும்பவும் முரண்டு பிடிக்கலாம்.  UFBU திரும்பவும் வேலைநிறுத்த அழைப்பு விடுக்கலாம். ஒவ்வொரு கட்டமாகத்தான் நாம் முன்னேற முடியும்.,சளைக்காத, சமரசமற்ற முயற்சிகளால் மட்டுமே வெற்றி கிட்டும். இதை முதலில் நாம் தெளிவாகிக்கொள்ள வேண்டும்.  ஒரே நாளில், ஒரே சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிடும் என நினைப்பதில்தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

IBAவோடு இன்னும் பேசித்தீர்க்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. compassionate appointment, shifting DA pattern from the year 1961 to 2001, Five days week போல முக்கிய கோரிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் நமக்கு சாதகமாக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டும். போராட்டங்கள் இன்றி சாத்தியமில்லை.  போராட்டத்திற்கு ஊழியர்கள் எப்போதும் தயாராக இருப்பதன் மூலமே, UFBU  பேச்சுவார்த்தையை நமக்கு சாதகமானதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எப்போது வேண்டுமானாலும் போராட முடியும் என்கிற நம்பிக்கையோடு UFBU  பேச்சுவார்த்தைக்கு செல்கிறதே தவிர, இனி எப்போதும் இல்லை என போராட்டத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டு அல்ல. அதுதான் நம் அனைவரின் நம்பிக்கை. இப்போதைய UFBU  முடிவின் சூட்சுமமும் கூட.

நம்பிக்கையோடு பயணிப்போம்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!